Saturday, September 5, 2015

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்....


நான் பிறந்ததும் என் முதல் குருவாக விளங்கிய என் தாய் தந்தையின் பாதமலர்களை வணங்குகின்றேன்.... பள்ளிப்பருவம் முதல் இன்றுவரை என் வளர்ச்சிக்கு காரணமாக என் நினைவில் நிலைத்து நிற்கும் ஆசிரியர்களை நினைவு கூர்கின்றேன்.. இத்தருணத்தில்... 
கேம்பிரிட்ஜ் கான்வெண்ட்டில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. படிக்கையில் பெயர் தெரியாத அன்பு பரிமாறிகொண்ட ஓர் ஆசிரியை, சரஸ்வதி துவக்கப்பள்ளியில் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பில் எனக்கு பாடம் எடுத்த மல்லிகா டீச்சர், நான்காம் வகுப்பில் எனக்கு பாடம் பயிற்றுவித்த அன்பான கமலா அம்மா, ஐந்தாம் வகுப்பில் கம்பீரத்தை எனக்கு கற்றுத்தந்து என்னை முதல் மதிப்பெண் எடுக்க வைத்த பாலகிருஷ்ணன் ஐயா, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் எனக்குள் நல்ல மனிதத்தன்மையை விதைத்த எங்கள் பாலகுண்டு ஐயா, 6 ஆம் வகுப்பு முதல் எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த ராமலிங்கம் ஐயா, கணிதம் கற்றுக்கொடுத்த சீனிவாசன் ஐயா, சமூக அறிவியல் சொல்லிக்கொடுத்த சுகுணா டீச்சர், எங்கள் பள்ளியில் ஒழுங்கீனமாக நடக்காமல் எங்களை கட்டி காத்த எங்கள் உடற்கல்வி ஆசிரியர்கள், 


10 ஆம் வகுப்பில் ஒய்.எம்.சி.ஏ பள்ளியில் நட்புநிலையில் மாணவர்களை நடத்திய தமிழ் ஆசிரியர்களான நக்கீரன் மற்றும் சந்திரன் ஐயாக்கள், 10 ஆம் வகுப்பு கணித ஆசிரியர் வின்செண்ட் சார், உசேன் சார், 11 ஆம் வகுப்பில் எங்களுக்கு பாடம் எடுத்த கணிதம்-நாராயணன், தாவரவியல்-நளினி, ஆங்கிலத்தையும் இனிக்கும் விதத்தில் சொல்லித் தந்த - பானுமதி அம்மா, எங்களுக்கு இயற்பியலை இயல்பாய் சொல்லித் தந்த ஆசிரியர் மற்றும் வேதியியல் பீர்முகம்மது சார் ஆகியோர்களின் பாத மலர்களை பணிகின்றேன். 


மேலும் நந்தனம் கல்லூரியில் நான் கால்பதித்த முதல் நாளிலேயே எனக்கு வழிகாட்டிய தமிழ்த்துறை அர்த்தநாரீஸ்வரன் ஐயா, தனியொரு மாணவனாக நான் மட்டுமே கல்லூரிச் சென்றாலும் என் ஒருவனை மட்டுமே உட்கார வைத்து பாடம் நடத்திய பாலகிருட்டிணன் ஐயா, கல்லூரியில் இளங்கலை பயிலும் பொழுதே என்னை பேராசிரியர் பணிக்கு படிக்கும் படி என்னை வழிகாட்டிய மதிப்பிற்குரிய சீ. குணசேகர் ஐயா, பகுத்தறிவை எங்களுக்கு பாசத்துடன் ஊட்டிய கமலாம்மாள், கடவுள் பக்தியை எதிர்பாராமல் கற்றுக்கொடுத்த பானுமதி அம்மா, எங்களுடன் நட்புநிலையில் பழகி பாடம் சொல்லிக் கொடுத்த விஜயாம்மா...எங்கள் அறிவை செம்மைப்படுத்த எங்களைத் தூண்டிய மங்கையர்க்கரசி அம்மா... முதன் முதலாக கல்லூரிக் காலத்தில் ஆங்கில இந்து நாளிதழை எனக்கு அறிமுகப்படுத்தி ஆங்கிலம் படிக்க வலியுறுத்திய நாராயணன் ஐயா...கலைத்துறையில் சாதனை படைக்கும் படி தமிழ் படிக்க எங்களை வலியுறுத்திய முத்துவேல் ஐயா, உ.சுப்பிரமணியன் ஐயா, அன்பின் திரு உருவாய் எங்களை எப்பொழுதும் வழிநடத்திய எங்கள் துறைத்தலைவர் சடகோபன் ஐயா ஆகியோரின் பொற்பாதங்களைப் பணிகின்றேன். 


முதுகலை பயில சென்னை மாநிலக்கல்லூரியில் நான் நுழைந்ததும்...எனக்கு வாய்ப்பளித்து மாணவனாய் சேர்த்துக் கொண்ட எங்கள் தமிழ்த்துறைத் தலைவர் ஆடியபாதம் ஐயா, கவிராயர் ஐயா, சுப்புலட்சுமி அம்மா, ஜம்புலிங்கம் ஐயா, வேலு ஐயா, நட்புடன் திகழ்ந்த டேவிட் ஐயா முதுகலை ஆய்வில் என் நெறியாளராய் விளங்கிய அர்த்தநாரீஸ்வரன் ஐயா, அன்புநிலையில் எங்கள் பெயர்களை நினைவு வைத்துக்கொண்டு அழைக்கும் முத்துசுவாமி ஐயா, ஆய்வியல் நிறைஞர் படிப்பில் என்னை மாணவனாக ஏற்று என் வாழ்வில் பெரும் ஏற்றத்தைப் பெறச் செய்த என் நெறியாளர் உதயகுமார் ஐயா ஆகியோர் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள். 



மாணவ நிலையைக் கடந்து பேராசிரியர் பணிவாய்ப்பு எனக்கு கிடைத்த பின் ஓர் ஆசிரியராக நான் என்னை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்திய என் துறை பேராசிரியர்கள்... திரு. வரதன் ஐயா, மற்றும் எங்கள் சிவசுப்பிரமணியம் ஐயா மற்றும் இலக்குமி நாராயணி அம்மா ஆகியோரையும் என் ஆசிரியர்களாகவே கருதுகின்றேன்... அவர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம். மேலும் நட்புநிலையில் ஆசிரியர் மாணவர் நல்லுறவைப் பேணும் முறையை நான் அறிய எனக்கு பெரும் தாக்கமாக இருந்த அண்ணன் பழநியப்பன் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகும். 


இன்று முனைவர் பட்ட மாணவராக என்னை ஏற்றுக்கொண்டு என் முனைவர் பட்ட ஆய்வு நெறியாளராகவும் ஒரு அண்ணனாகவும் இருந்து என் ஆய்வுக்கு உறுதுணையாக இருக்கும் திரு.செல்வகுமார் அவர்களுக்கும் என் அன்பும் நட்பும் பாசமும் என்றும் உரித்தாகும். 


என் வாழ்வில் நான் கடந்து வந்த பாதையில் என் நினைவில் நின்ற நான் சொல்ல மறந்த... அன்றாட வாழ்வில் போகிற போக்கில் நமக்கு பாடம் சொல்லித்தரும் எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகும். 


இறுதியாக நான் என் மாணவர்களுக்கு சொல்வதெல்லாம் அப்துல் கலாமின் வரிகள் தான்.... அவை... நல்ல பேராசிரியரிடம் கற்றுக்கொள்ளும் மோசமான மாணவனைக் காட்டிலும் மோசமான பேராசிரியரிடம் கற்றுக் கொள்ளும் நல்ல மாணவன் மிகுதியாகக் கற்றுக் கொள்கிறான். ஆகவே மாணவர்களே நல்ல மாணவர்களாய் இருங்கள்... என் நினைவில் என் ஆசிரியர்கள் நிற்பது போல் என் மாணவர்கள் நினைவில் நானும் நல்ல பேராசிரியராக முயற்சி செய்துகொண்டிருக்கின்றேன். 


நன்றி..

Saturday, August 25, 2012

விளிம்புநிலை மாணவர்களின் உளவியல் சிக்கல்களும் தீர்வுகளும்


தமிழ்வழிக் கல்வியிலிருந்து ஆங்கிலவழிக் கல்விக்கு மாறும்
உயர்கல்வி மாணவர்களின் உளவியல் சிக்கல்களும் தீர்வுகளும்.

    மொழி என்பது அறிவு அன்று, அது அறிதலுக்கான ஒரு கருவியாகும். கருத்துப் பகிர்தலுக்காக ஆதிமனிதன் பயன்படுத்திய முதல் மொழி சைகை மொழியாகும். மனிதனின் தேவையை அம்மொழி நிறைவு செய்யாதச் சூழலில் குரல் ஒலி சார்ந்த மொழியை நோக்கி மனிதன் பயணிக்கத் தொடங்கினான். தேவையே மனிதனை வளர்த்தெடுக்கின்றது என்னும் சான்றோர் கூற்றுப்படி மனிதனின் உடல் உறுப்புக்கள் குரல்மொழி உச்சரிப்புக்கு ஏற்ப வளர்ச்சி அடைகின்றது. மனிதன் மொழியைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் தன்னைத்  தகவமைத்துக் கொள்கின்றான்.  மனிதனின் தேவைக் கருதி தன்னை மாற்றிக் கொள்ளும் இந்தக் குணமே அவனை இந்த உலகில் நிலைக்கொள்ளச் செய்கின்றது.
    
    ஆதிமனிதனே மொழி சார்ந்து, சூழல் சார்ந்து தன்னை மாற்றிக் கொண்டான். ஆனால் இன்றைய மாணவர்களோ கால ஓட்டத்திற்கு ஏற்ப மொழி சார்ந்து, சூழல் சார்ந்து தம்மை மாற்றிக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். அத்தயக்கம் சார்ந்த அவர்களது உளவியல் சிக்கல்களை வெளிப்படுத்தி, அவர்களை மேம்படுத்துவதற்கான தீர்வுகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

உளவியல் சிக்கல்கள்
     தமிழ்வழிக் கல்வியில் இருந்து ஆங்கில வழிக் கல்விக்கு மாறி உயர்கல்வி மேற்கொள்ளும் மாணவர்கள் தன்னுடைய புதியச் சூழல் சார்ந்து மிகுந்த சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். ஆங்கிலவழியில் தாம் படிக்கும் பாடங்களில் உள்ள அவர்களது விருப்பமின்மை, அவர்கள் அந்த பாடங்களை உள்வாங்கிக் கொள்வதில் சிக்கல்களை  ஏற்படுத்துகின்றது. இது அவர்களது தேர்வு முடிவில் தோல்வியாக வெளிப்படுகின்றது. உண்மையில் தாய்மொழியில் உயர்கல்வியை கற்கும் மாணவனே உயர்தர அறிவினைப் பெறுகின்றான். இதனைக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள்  உயர்தரக்கல்வி நமது பாஷை மூலமாகக் கொடுக்க வேண்டுமென்றும் அப்படிக் கொடுத்தால் மாத்திரமே அக்கல்வியால் நமது நாட்டுக்குப் பயனுண்டாகுமென்றும் சொல்லக்கூட நமக்கு இன்னும் தைரியம் பிறக்கவில்லை(தாகூர், தாய்மொழியில் கல்வி, மாடர்ன் ரெவியூ) எனக் குறிப்பிடுகின்றார்.

    தாய்மொழியில் கற்கும் கல்வி என்பது பொருள் உணர்ந்து படிப்பது மற்றும் சுயசிந்தனைக்கு வழிவகுப்பதாகும். மொழி புரியாமல் படிக்கும் கல்வி என்பது திணிக்கப்பட்டதாகவே அமையும். இக்கருத்தை பெரியாரும் வலியுறுத்தியிருக்கின்றார் என்பதை ”தந்தை பெரியாருடைய கொள்கை ஆங்கிலத்தைப் புறக்கணிப்பதல்ல. ஆனால், அதே நேரத்தில் கல்வி என்பது கற்றுக் கொள்வதற்காக. கல்வி என்பது உள்ளே இருப்பதை வெளியே எடுப்பது. அதுதான் இங்கே பிரச்சினையே. நம்முடைய நாட்டிலே கல்வி என்பது எதையோ திறந்து உள்ளே மூடிவைத்து அனுப்புவதைப் போலத்தான் இன்றைய கல்வி, சிந்தனையாளர்கள் மத்தியிலே இருக்கிறது. கல்வி என்பது மனித மூளையிலிருந்து ஒருவருடைய ஆற்றலைத் திறமையை வெளிக்-கொணர்வது. (மங்கள முருகேசன், உண்மை இதழ், தாய்மொழியில் கல்வி,) என்ற கூற்றால் உணர முடிகின்றது. இருப்பினும் இன்றையச் சூழலில் ஆங்கில மொழியில் திறம் பெற்றிருத்தல் என்பதும் பணிவாய்ப்பு சார்ந்து தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

தாழ்வு மனப்பான்மை   
    ஆசிரியர் மாணவர் இடையிலான கருத்துப் பகிர்தல் என்பதும்கூட மாணவர் தம் ஆங்கில மொழித்திறன் குறைபாடு காரணமாக தடைபட்டுப் போகின்றது. தமக்கு தெரிந்த செய்தியை ஆங்கில மொழியில் வெளிப்படுத்த இயலாத காரணத்தாலேயே தன்னை ஓர் அறிவிலியாக மாணவன் கருதுகின்றான்.  இந்நிலை மாணவர்களிடையே மறைமுகமாக தாழ்வு மனப்பான்மையை வளர்க்கின்றது.  ஆங்கில மொழி மீதான வெறுப்பு அந்த பாடத்தின் மீதும் அம்மொழியில் பாடம் நடத்தும் ஆசிரியர் மீதுமாக மடைமாற்றம் அடைகின்றது. 

குழு மனப்பான்மை
     மாணவர்களிடையே அவர்கள்தம் மொழியறிவுச் சார்ந்த குழு மனப்பான்மை உருவாகின்றது. மாணவர்தம் துறைச்சார்ந்த கல்லூரி விழா ஏதெனும் நடக்கும் பொழுது, தாய்மொழியை பின்னணியாக உடைய மாணவர்கள் அவ்விழாவில் பின்னணியில் இயங்கும் ஓர் உதவியாளராகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.  அதுமட்டுமின்றி தன்னொத்த மொழித்திறன் வாய்ந்த மாணவர்களோடு மட்டுமே நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்கின்றனர். இந்நிலை மாணவர்கள் இடையே வேற்றுமை வளர காரணமாகின்றது.



குடும்ப, பொருளாதாரப் பின்னணி
    ஒவ்வொரு மாணவரும் தமது மொழியறிவினை தமது குடும்பம் மற்றும் பொருளாதார பின்னணியோடு தொடர்பு படுத்திக் கொள்கின்றனர்.  ஆங்கில மொழியாளுமை உடைய மாணவர் மேட்டிமைத் தனத்தோடும், தமிழ்மொழி பின்னணி உடைய மாணவர் தாழ்நிலையோடும் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். தம் மொழியறிவு சார்ந்த தாழ்வு மனப்பான்மையே தமிழ்மொழியைப் பின்னணியாக கொண்ட மாணவர்களைக் கல்லூரியின் வளாகத்தேர்வு முதலானவற்றில் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டச்செய்கின்றது.

தீர்வுகள்
    ஆங்கிலமொழியும் தமிழ்மொழி போன்றே தகவல் தொடர்புக்கும், கருத்து பரிமாற்றத்துக்கும்  பயன்படும் ஒரு மொழி ஆகும். ஒவ்வொரு மாணவரும் தாய்மொழி அல்லாத பிறமொழியை கற்கும் பொழுது, அம்மொழிக்கு மொழி என்பதைத் தவிர வேறு எந்தவொரு கூடுதல் சிறப்பும் இல்லை, ஆனால் ஒவ்வொருவருக்கும்  அவர்தம் தாய்மொழி என்பது உணர்வோடு, அறிவோடு தொடர்புடையது.  இன்றையச் சூழலில் ஆங்கில மொழி என்பது வேலைவாய்ப்பை ஈட்டித்தரும் மொழியாக உள்ளது. இத்தகையச் சூழலில் ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டுமல்லாமல் ஒரு அறிவாகவும் உருவகிக்கப்படுகின்றது. இந்த மாயை முதலில் நமது மாணவர்கள் மத்தியில் இருந்து விலக வேண்டும்.

 ஆசிரியர் மாணவர் கடமை
    நீரில் வாழும் தவளை எவ்விதம் தன்னை நிலத்திற்கேற்ப மாற்றி தகவமைத்துக் கொள்கின்றதோ, அதுபோல நமது மாணவர்களும் பொருளாதார மற்றும் பணிவாய்ப்புக் கருதி ஆங்கில மொழியை தன்வயப்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும். மாணவர்கள் பேசும் ஆங்கிலம் தவறாக இருப்பினும் அதனை எள்ளி நகையாடாமல் தாய்மை உணர்வோடு அதனைத் திருத்த முன்வரும் ஆசிரியர்களும், நண்பர்களும் மிகவும் அவசியம். மாணவர்களும் ஆங்கில மொழியிலும் தமிழ் மொழியிலும் உள்ள அடிப்படையான ஒற்றுமை வேற்றுமைகளை அலசி ஆராய்ந்து கற்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களும் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு ஏற்படும் ஐயங்களைத் தமிழில் சொல்லித்தர முன்வருவதோடு ஆங்கிலத்திலும் அதனை அவர்கள் கற்க வேண்டியதன் அவசியத்தையும் அறிவுறுத்த வேண்டும்.

    இருமொழிகளும் நன்கு தெரிந்த மாணவர்களைத் தமிழ்வழி பயின்ற மாணவர்களோடு இணைந்துத் துறைச்சார்ந்த, மொழிசார்ந்த செயல்பாடுகளை நடத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். தமிழ்வழியில் ஆங்கிலத்தின் அடிப்படை இலக்கணங்களை கற்றுக்கொள்ள உதவும் இணையத் தளங்களைக் காணும்படி மாணவர்களை அறிவுறுத்த வேண்டும். ஆங்கிலக் கலந்துரையாடல்களில் தமிழ்வழி மாணவர்களும் கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். கற்றல் என்பது கற்றதைப் பிறர்க்கு கற்பிப்பதேயாகும். அதற்கு மொழி ஒரு தடையல்ல என்பதை மாணவர் உணரும்படி செய்தல் வேண்டும். தம் கருத்தை ஆங்கிலத்தில் வெளிப்படுத்தும் ஆற்றலை மாணவன் அடையும் பொழுது அது பலகோடி மக்களுக்கும் பயன் நல்க கூடியதாக இருக்கும் என்பதையும் மாணவர்க்கு உணர்த்த வேண்டும். 

    மொழியை மனிதன் உருவாக்கினான், மொழி மனிதனை உருவாக்கவில்லை. இருப்பினும் மொழி மனிதனுக்கு அறிவு சார்ந்தும் நாகரீகம் சார்ந்தும் பல கருத்துக்களைத் தொடர்ந்து சொல்லித் தருகின்றது. அப்படிப்பட்ட மொழியை அனைவரும் கையாள்வது என்பது முயன்றால் எளிமையாகும். ஒரு மொழியை மட்டும் தெரிந்த ஒருவன், அயல்நாட்டில் அயல்மக்களிடயே விடப்பட்டால் அவன் அவர்களது மொழியை மிகவிரைவில் கற்றுக்கொண்டு விடுவான் என்பது கண்கூடு. அதுபோலத்தான் தமிழ்மொழியை பின்னணியாகக் கொண்டு உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் விருப்பத்தோடு முயற்சியும் மேற்கொண்டால் ஆங்கில மொழியை எளிதில் கற்று தமது ஆளுகைக்குள் மொழியை வசப்படுத்திவிட முடியும்.

துணை நூல்கள்
  1. தாகூர், தாய்மொழியில் கல்வி, மாடர்ன் ரெவியூ (மொழிபெயர்ப்புக் கட்டுரை, சுதேசமித்ரன்)
  2. தாய்மொழியில் கல்வி, உண்மை இதழ், மங்கள முருகேசன்.
(விளிம்புநிலை மாணவர்களின் கல்வி மேம்பாடு குறித்து சென்னையில் நடைபெற்ற AUT கருத்தரங்கில் என்னால் வாசிக்கப்பட்ட கட்டுரை இது. )

Thursday, February 26, 2009

அமேரிக்க ஆஸ்காரும் அம்மூர் கலைமாமணியும்


முதலில் இசைத்துறையில் சாதித்து நம் இந்தியாவை நம் தமிழகத்தை உலக அரங்கில் தலை நிமிரச் செய்த உண்மையான உலக நாயகன் A.R.ரஹ்மான் அவர்களுக்கு நமது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் ஆஸ்கார் பெறும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் அவரது உழைப்பையும் உணர வேண்டும். ஏதோ காலநேரம் கூடிவந்து அதிர்ஷ்டத்தில் அவர் இந்த விருதினைப் பெற்றார் என்று எண்ணுவோர் அவர் விளம்பர படங்களுக்கு இசை அமைத்த காலங்களில் இருந்து அவர் உழைப்பை அளவிட வேண்டும். அது மட்டும் அல்லாமல் விருதுக்கு தேர்ந்தெடுக்கும் குழுவின் பல விதமான தேர்வு நிலைகளையும் மனதில் கொள்ள வேண்டும். இந்த சூழலில் இரு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற பிறகும் A.R.ரஹ்மான் பேசிய பணிவான பேச்சுக்கே இன்னொரு ஆஸ்கார் கொடுக்கலாம். இசை அனைவருக்கும் பொதுவானது. ஆதலால் உலக மனிதனாக ஆங்கிலத்திலும், ஒரு இந்தியனாக இந்தியிலும், ஒரு தமிழனாக “எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லி உலக அரங்கில் கைத்தட்டலைப் பெற்ற மனிதனாகிய A.R.ரஹ்மான் அவர்களுக்கு ஆஸ்கார் விருது கூட தலை வணங்கியது ஆச்சரியமில்லை.



அமேரிக்காவிலிருந்து அப்படியே பிளைட் பிடித்து அம்மூருக்கு வாருங்கள் சமீபத்தில் 71 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்குரியவர்கள் அனைவரும் பாரட்டப்பட வேண்டியவர்கள் தான் என்று தமிழக அரசே முடிவு செய்துவிட்டுதான் விருதினை அறிவிக்கிறது. ஆனால் பாசமிகு தமிழர்களோ இந்த விருதுக்கான பட்டியலில்

தங்கள் வீட்டு நாய்க்குட்டியின் பெயரும் வந்திருக்கிறதா என சரி பார்க்கும் அளவிற்கு கேலிச்சித்திரமாகியுள்ளது இந்த விருதின் தன்மை என்பது வேதனை அளிக்கிறது. உண்மையாக சாதித்த இலக்கிய வாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் இந்த விருது கிடைக்கும் அதே வேளையில் சற்றும் தகுதி அல்லாத நயன்தாரா, அசின் முதலான நபர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அந்த விருதையே ஏளனம் செய்வதாக இருக்கிறது. பரதக்கலைஞர். திருமதி.ரஜினி மகள் அவர்களை விட சிறப்பு வாய்ந்த பரதக்கலைஞர்கள் வேறு யாரும் இல்லை என்பது பரதக்கலைக்கே பெருத்த அவமானமாக இல்லையா? எண்ணிக்கைக்காக தகுதியல்லாதவர்களுக்கு விருதுகள் வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும். தகுதியற்ற நபர்கள் தாங்களே முன்வந்து இந்த விருதுகளை புறக்கணிக்க வேண்டும். இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு உண்மையான வல்லுநர் குழுவினைக் கொண்டு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். ஏனென்றால் இந்த விருதுக்குரியவர்களுக்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் நம் தமிழனின் வியர்வைத்துளிகள் அவை நல்ல காரியத்திற்கு பயன்பட தமிழகஅரசு மனது வைக்க வேண்டும்.

இவண்

ஈகைவேந்தன்




Friday, September 26, 2008

ஆகஸ்ட் 15 கொண்டாட்டம்

\

ஆகஸ்ட் 15 அன்று எங்கள் வீட்டு வாண்டுகள் வெள்ளையும் சொள்ளையுமாக உடையணிந்துக் கொண்டு பாசக்கிளிகளாக வலம் வந்த காட்சிகள் தான் இவை.

Thursday, September 25, 2008

ரெளத்திரம் பழகு


ரெளத்திரம் பழகு என்றான் பாரதி இன்றைய இளைஞர்களிடம் இக்குணம் குறைந்துள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. அடாவடியாக எல்லோரையும் வெட்டிக் குத்துவது அல்ல பாரதி சொன்னதன் பொருள். நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டியவற்றை, நமது உரிமையைக் கேட்டுப் பெற்றாலே போதும். அன்றாடம் சமூகத்தில் நடக்கும் அவலங்களைக் கண்டும் காணாமல் செல்லும் கொடுமை பெருகி வருகிறது. நமக்கு ஏன் வம்பு இதைக் கேட்டு கெட்டப்பெயர் பெறுவானேன், என ஒதுங்கிச் செல்லும் மனோபாவமே நாம் இன்னும் அடிமைத்தளையிலிருந்தது முற்றிலும் விலகவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அரசு அலுவலகங்களில், அன்றாடம் பயணம் செய்யும் பேருந்துகளில், கடைக் கண்ணிகளில் என நாம் ஒவ்வொரு நாளும் பல மனிதர்களை சந்திக்கின்றோம். நமக்கு நிறைவேற வேண்டிய வேலைகளுக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமைக்காகவே அவர்கள் உரிமையோடு கையூட்டுப் பெறுவதைப் பார்க்க முடிகிறது. ஒரு முறையாவது நாம் ஏன் என்று கேள்விக் கேட்டுப் பார்த்திருக்கிறோமா? பேருந்து நிலையங்களில் சிறுகடைகளில் பொருளின் அதிக பட்ச விலையினை விட அதிகமாக காசு வாங்குவதைத் தான் கேள்விக் கேட்டிருப்போமா? ஒரு சில உணவு விடுதிகளுக்கு சென்று பொருள் தரமாக இல்லாவிட்டால் கூட அதனை அப்படியே வைத்து விட்டு பணமும் கொடுத்துவிட்டு புலம்பிக் கொண்டே வெளியேறுகிறோமே, ஒரு முறையாவது கோபமாக வேண்டாம் அன்பாகவாவது நல்லப் பொருளைப் போடச் சொல்லி வலியுறுத்துகிறோமா? அனைத்தும் நாம் செய்யும் தவறுகளே தவறு செய்பவர்களைக் கேள்வி கேட்காமல் அவர்களை அப்படியேத் தொடரச் செய்வது நம் தவறுதான்.

இன்றைய கணினி யுகத்தில் அரசு அலுவலகங்களின் பல பணிகள் இணைய வழியிலேயே எளிதில் நிறைவேற்றும் வகையில் நடைமுறைக்கு வந்துக் கொண்டிருக்கிறது. பிறப்பு இறப்பு சான்றிதழ், பத்திரப் பதிவு நடைமுறைகள் என பலவும் இணையவழிச் சேவைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பெருமளவில் கையூட்டுக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

இதில் நாம் நம் பணத்தை பெரும் பகுதி இழக்கின்றோம். இது போல் நாம் அறிய, நம்மிடம் இருந்து கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்களிடம் நாம் இழக்கும் பணத்தை சேமித்து நம் மனதார எழைக்குழந்தைகளின் கல்விக்கோ ஆதரவற்ற சிறுவர்களுக்கோ, முதியோர் இல்லங்களுக்கோ நாமே உதவி செய்யலாம். இதன் வழி சமூகத்தின் உயர்வுக்கு நம்மால் ஆன பணியினைச் செய்தோம் என்ற மன நிறைவும் நமக்குக் கிடைக்கும்.
அன்புடன்
ஈகைவேந்தன்

Monday, September 15, 2008

வால் பசங்க


குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்

Wednesday, July 30, 2008

மொழி கடந்த இசை



இந்த பாடல் பாடும் அக்கா யார் என்று எனக்கு தெரியாது ஆனால் இவர்கள் பாடும் பாடலும் அவர்களின் முக பாவமும் மொழி கடந்து இசையை ரசிக்க வைக்கிறது.
கேட்டுப் பார்த்து மகிழுங்கள்.